3 - 500 ரூபாயில் மர செடி வகைகள்; ஒடிசா வரை ஏற்றுமதி- நர்சரி தொழிலில் ஜொலிக்கும் கல்லுக்குடியிருப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தின் பெருமை – இந்தியா முழுவதும் பசுமையைப் பரப்பும் கல்லுக்குடியிருப்பு நர்சரி கிராமம்.புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள கல்லுக்குடியிருப்பு கிராமம், நர்சரி தொழிலில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கிராம ம

புதுக்கோட்டை மாவட்டத்தின் பெருமை – இந்தியா முழுவதும் பசுமையைப் பரப்பும் கல்லுக்குடியிருப்பு நர்சரி கிராமம்.புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள கல்லுக்குடியிருப்பு கிராமம், நர்சரி தொழிலில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கிராம மக்கள் பெரும்பாலும் நர்சரி தொழிலையே தங்களது முக்கிய வாழ்வாதாரமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.இந்த கிராமத்தில் அலங்காரச் செடிகள், பூச்செடிகள், பழமரக் கன்றுகள், நிழல் தரும் மரக்கன்றுகள், மருத்துவ மூலிகைச் செடிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன.கல்லுக்குடியிருப்பு நர்சரி கிராமம் மேலும் டிராகன் பழம், லிச்சி, அவகேடோ, ரம்புத்தான், ஸ்ட்ராபெரி, கொய்யா, மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் போன்ற பழ வகை செடிகளும், மாமரம், வாழைமரம், தென்னை மரம் போன்ற மரக்கன்றுகளும் விற்கின்றனர்.ரூ.3 முதல் ரூ.500 வரை பல்வேறு விலையில் செடிகள் விற்பனை செய்யப்படுவதால், அனைத்து தரப்பு மக்களும் எளிதாக வாங்கிச் செல்லும் வகையில் உள்ளது. இங்கு செடிகள் வளர்ப்பதற்கு இயற்கை உரங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. குறிப்பாக மாட்டுச் சாணம் மற்றும் ஆட்டுச் சாணம் போன்ற இயற்கை உரங்களைப் பயன்படுத்தி தரமான செடிகள் வளர்க்கப்படுகின்றன. மேலும் ஆரோக்கியமான முறையில் செடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கல்லுக்குடியிருப்பில் உற்பத்தியாகும் செடிகள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. குறிப்பாக ஒடிசா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அதிகப்படியான ஏற்றுமதியை செய்துவருகின்றனர். இதன் மூலம் இந்தச் சிறிய கிராமம் இந்தியா முழுவதும் பசுமையைப் பரப்பும் மையமாக திகழ்கிறது.சுமார் 400 முதல் 450 குடும்பங்கள் இந்த தொழிலை செய்து வருகின்றனர்.நர்சரி தொழிலின் மூலம் செலவுகள் அனைத்தும் போக, ஒரு மாதத்திற்கு சுமார் ரூ.40,000 வரை வருமானம் கிடைப்பதாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தத் தொழில் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, பலருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது.விவசாயத்தை காட்டிலும் இந்த தொழிலில் 2 மடங்கு லாபம் வருவதாக கூறுகின்றனர்.கல்லுக்குடியிருப்பு நர்சரி கிராமம் தமிழக அரசிடம் இவர்கள் வைக்கும் அன்பான கோரிக்கை, "செடிகளுக்கு தேவைப்படும் தண்ணீரை நாங்கள் Borewell போட்டு எடுத்து பயன்படுத்துகிறோம். அதனால் எங்களுக்கு மின்சாரக் கட்டணம் அதிகமாக வருகின்றது." இந்த கட்டணத்தை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை வைக்கின்றனர் கல்லுக்குடியிருப்பு கிராமத்து மக்கள்.இந்த தொழிலை செய்வதே தங்களுக்கு மனநிம்மதியும் மகிழ்ச்சியையும் தருவதாக கூறுகின்றனர்.